Pages

வியாழன், செப்டம்பர் 12, 2013

Tamil Language usage in all Banks



 
வங்கிகளில் வாழாத தமிழ் மொழி . தமிழர்கள் மீட்டெடுப்பார்களா ?
வாலறிவன் அவர்களால் Friday 26th July 2013 அன்று 11:10:23 மணிக்கு பதியப்பட்டது.
வங்கிகளில் வாழாத தமிழ் மொழி . தமிழர்கள் மீட்டெடுப்பார்களா ?
 
இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் நடுவண் அரசின் ரிசெர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட முடியும். தனியார் வங்கிகளும் நடுவண் ரிசெர்வ் வங்கியின் ஆணைப்படி தான் கேட்டு இயங்க வேண்டும்.
 
இந்த நடுவண் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கியில் இந்தி மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த விடயமே . ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் இந்தி மொழியை பயன்பாட்டில் வைக்க உத்திகளை கையாளுகிறார்கள் என்பதை அறிந்தால் தலையே சுற்றிவிடும் . கீழ் உள்ள இணைப்பில் சென்று பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.
 
http://www.rbi.org.in/Scripts/BS_CircularIndexDisplay.aspx?Id=8205
 
இந்தி மொழியை இந்தியா முழுவதும் வேர்பரப்ப அவர்கள் சிறப்பு இந்திப் பயிற்சி, இந்திப் பெயர் பலகைகள், இந்தி விளம்பரங்கள், இந்தி துறைகள், இந்தி குமாஸ்தா வேலை வாய்ப்புகள், இந்தி போட்டிகள், இந்தி வகுப்புகள் என நீண்டு கொண்டே போகிறது பட்டியல் . அந்த அளவிற்கு அரசு எல்லா துறைகளிலும் இந்தியை வளர்க பாடுபடுகிறது. (பின்பு இந்தியா தமிழை வளர்க்கவா பாடுபடும் ?). இந்திக்கு கொடுக்கும் உரிமைகள் மற்ற மொழிகளுக்கு இந்தியா கொடுப்பதில்லை. அதுமட்டுமல்ல எல்லா மொழிகளையும் திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது என்றே சொல்லலாம்.
 
தீமையிலும் ஒரு நன்மை உள்ளது. அதாவது நடுவண் ரிசெர்வ் வங்கியின் ஆணைப்படி எல்லா வங்கிகளும் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் மாநில மொழியை கட்டாயம் அனைத்து அச்சு பொருட்களிலும் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆணை.
 
http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/56LD300611FL.pdf
 
இதை சோதிக்க அருகில் உள்ள எச்.டி.எப்.சி வங்கிக்கு சென்று பார்வையிட்டேன் . அங்குள்ள பணம் செலுத்தும் படிவங்கள் , வைப்புத் தொகை படிவங்கள், வங்கிக் கணக்கு தொடங்க விண்ணப்பப் படிவங்கள் எதிலும் தமிழ் இல்லை . இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இருந்தது . இது குறித்து வங்கி மேலாளரிடம் புகார் அளித்தேன் . அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் . ஆனால் அடுத்த வாரம் அவரை சந்திக்கும் போது , எங்கள் வங்கிக்கு அப்படி ஒரு நிபந்தனை இல்லை என்று மேலிடம் சொல்கிறது அதனால் இரு மொழி கொள்கை தான் இங்கு கடை பிடிக்கப்படும் என்று கூறினார். நீங்கள் ரிசெர்வ் வங்கியின் ஆணையை படியுங்கள் சட்டப்படி மூன்று மொழிகளில் இருக்க வேண்டும் என்று கூறி நடுவண் ரிசெர்வ் வங்கியிடம் புகார் அளித்தேன்.
 
அதே காலத்தில் ஐ.சி.ஐ.சி  வங்கியிலும் புகார் கொடுத்தேன். அவர்கள் புகாரை பெற்றுக் கொண்டு படிவங்கள் அனைத்தும் தமிழிலும் இருக்கும் படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாம் எழுதும் காசோலை தமிழில் எழுதிக் கொடுத்தால் அதை அவர்கள் பெற்றுக் கொண்டு தான் தீர வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதை அவர்கள் நிர்வாகத்திடம் கூறியபோது , தமிழில் காசோலை எழுதினால் அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம், பிரச்சனை இல்லை என்றனர்.
 
தனியார் வங்கிகளில் நிலைமை இப்படி இருக்க அரசின் பொதுத் துறை வங்கிகள் பலவற்றில் தமிழில் யாரும் படிவங்கள் பயன்படுத்துவது இல்லை. பல தானியங்கி காசு இயந்திரங்களில் தமிழ் இல்லை. இந்த நிலையையும் நாம் மாற்ற வேண்டி உள்ளது. தமிழை வாழவைக்க தமிழர்கள் குறைந்த பட்சம் இந்த வங்கிகளுக்கு தலைவலியை கொடுக்க வேண்டும். அதாவது எல்லா படிவங்களிலும் , காசோலை உட்பட தமிழில் மட்டுமே எழுத வேண்டும் .
 
இவ்வாறு செய்வதால் அங்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவரை மட்டுமே வங்கிகள் வேலைக்கு அமர்த்தும். மேலும் படிவங்கள் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வங்கிகள் நடைமுறை படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றால் தமிழில் அச்சு வேலைகள் தமிழ் படித்தோருக்கே கிடைக்கும். வங்கியின் எல்லா பயன்பாட்டிலும் தமிழ் மொழி ஊடுருவினால் தமிழ் மொழிக்கென ஒரு துறையை இந்த வங்கிகள் தொடங்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் மூலம் தமிழும் வாழும் தமிழர்களும் வாழ்வார்கள். தமிழை புறக்கணிக்கும் வங்கிகளுக்கு நாம் இடித்துக் கூறுவோம். தமிழில் தான் காசோலை எழுதுவோம் , பணம் செலுத்துவோம் என்று அழுத்திக் கூறுவோம். அவர்கள் இதை ஏற்பதை தவிர வேறு வழியில்லை.
 
ஆகவே தமிழர்களே, வங்கிப் பரிவர்த்தனை அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கும் படி நாம் பார்த்துக் கொள்வோம். வங்கிகளில் தமிழ் வாழ்வது என்பது நம் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் அது பயனுள்ளதாக அமையும். இன்றிலிருந்து அதை செய்வோம்.
 
வாழ்க தமிழ் வளர்க தமிழர் நாடு.
 
 




கருத்துகள் இல்லை: