Pages

வியாழன், செப்டம்பர் 13, 2012

சீனியர் மூதாதையரின் படிமம் கண்டுபிடிப்பு


மத்திய ஆப்ரிக்க நாடான சாட் என்ற தேசத்தில், சஹேல் என்ற இடத்தில் கடந்த 2001ம் ஆண்டு அந்தப் பாறைப் படிமம் கிடைத்தது. குரங்கு போன்ற ஒரு உயிரினத்தின் தாடையும் பற்களும் அதில் இருந்தன. அவற்றின் வடிவமைப்பை வைத்து, தட்டையான முகமுடைய, மனிதனை ஒத்த தோற்றம் கொண்ட ஒரு குரங்கினத்தின் உடல் பாகங்களாக அவை இருக்கலாம் என முடிவுக்கு வந்தார்கள். பல ஆண்டுகள் அங்கு தேடி, எஞ்சிய பகுதிகளையும் எடுத்தார்கள். எல்லாவற்றையும் பொருத்தி அதை ஓரளவுக்கு வடிவமைக்க முடிந்தது. இதுவரை உலகில் வேறெங்கும் அடையாளம் காணப்படாத புதிய வகை உயிரினமாக அது இருந்தது. சாட் நாட்டின் சஹேல் பாலை வனத்தில் கிடைத்ததால், சஹேலாந்த்ரோபஸ் சாடென்சிஸ் எனப் பெயரிட்டார்கள்.

இந்த அறிவியல் பெயர் தவிர, உள்ளூர் மொழியில் டௌமாய் என்று ஒரு செல்லப் பெயரும் வைத்தார்கள். உயிரின் நம்பிக்கை என்று அர்த்தம் அந்த உயிரினத்தின் வயது என்னவாக இருக்கும் என அடுத்த ஆராய்ச்சி தொடங்கியது. அதுதான் உலகெங்கும் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தியது. அநேகமாக 72 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உயிரினமாக அது இருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவு சொன்னது. பரிணாம வளர்ச்சி யில் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய தோற்றம் மனித இனத்துக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் பரிணாம வளர்ச்சியில் நமது சீனியர் மூதாதையர் இந்த டௌமாய் தான் உலகின் மற்ற இடங்களில் கிடைத்த நம் இதர மூதாதைய இனத்தவர்கள் எல்லோருமே, இவருக்கு அடுத்துப் பிறந்தவர்கள்தான்.

விஞ்ஞான ரீதியில் இந்த எலும்புகள், பற்கள் மீது முகத்தை உருவாக்கும் முயற்சி தொடங்கியது. ஜெர்மனியின் வைல்டுலைஃப் ஆர்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள், ஹெஸ்ஸியன் மியூசியத்தில் வைத்து இதைச் செய்தார்கள். எல்லாம் முடிந்தபிறகு பார்த்தால், இவர் இப்படி இருக்கிறார் இவரது மண்டையோட்டில் முதுகெலும்பு சேர்ந்திருக்கும் அமைப்பை வைத்துப் பார்த்தால், நான்கு கால்களால் நடக்காமல், இவர் நிமிர்ந்து இரண்டு கால் களால் நடந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. மனித இனத்தின் வேகப் பாய்ச்சல் அப்போதே தொடங்கியிருக்க வேண்டும். உயிருள்ள மூதாதையர் போலவே தோற்றமளிக்கும் இவரை ஹெஸ்ஸியன் மியூசியத்தில் அடுத்த ஆண்டிலிருந்து பார்வையாளர்கள் ரசிக்கலாம்.

கருத்துகள் இல்லை: